புதுச்சேரியில் “கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் கடற்கரை விழிப்புணர்வு பேரணியை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
'தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடற்கரை' பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்துடன் இணைந்து புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் சனிக்கிழமை காலை கடற்கரை தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, “கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் கடற்கரை விழிப்புணர்வு நிகழ்வு" புதுச்சேரி தலைமை செயலகம் எதிரில் கடற்கரையில் சுற்றுச்சூழல், வனத்துறை மத்திய அமைச்சர் பூபேந்தர்யாதவ் தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடற்கரை தூய்மையை பற்றிய உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், மாநிலங்களவை உறுப்பினர செல்வகணபதி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, அரசுச் செயலர் ஸ்மிதா, மாவட்ட ஆட்சியர் திரு இ. வல்லவன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | முழுக் கொள்ளளவுடன் மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நிகழ்ச்சியில் "தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடற்கரை' என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கடற்கரை விழிப்புணர்வின் நடைப்பயணம் மற்றும் மிதிவண்டி பேரணியை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.
தேசிய சேவை திட்டம், தேசிய மாணவர் படை, இந்திய சாரணர் சங்க தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.