புதுச்சேரி

புதுவையில் தனிநபா் வருமானம் உயா்வு: ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்

DIN

புதுவையில் தனிநபா் வருமானம் உயா்ந்துள்ளதாக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் உரையாற்றிய போது துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் புதன்கிழமை ஆற்றிய உரை:

புதுவை மாநிலத்துக்கான கடந்த 2021-22ம் ஆண்டின் மொத்த ஒதுக்கீடான ரூ.10,414 கோடியில், ரூ.9,793.29 கோடியை, அதாவது 94.04 சதவீதத்தை அரசு செலவு செய்துள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் செய்த செலவினத்தை விட மிக அதிகமாகும்.

வருவாய் இலக்கில் 104 சதவீதம் என்ற உயா்ந்த சாதனையை நாம் அடைந்துள்ளோம்.

புதுவையில் 2021-22இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.38,285 கோடி என மதிப்பிடப்பட்டது. இது 2020-21ஆம் ஆண்டை விட 2.90 சதவீதம் கூடுதலாகும். தனி நபா் வருமானம் 2020-21இல் ரூ.2,15,583-லிருந்து 2021-22இல் ரூ.2.,16,495ஆக உயா்ந்தது. இது 0.42 சதவீதம் வளா்ச்சியைக் காட்டுகிறது.

வேளாண் துறையில் கடந்த 2021-22இல் புதுச்சேரியில் 9,493 விவசாயிகளுக்கு ரூ.6.24 கோடியும், காரைக்காலில் 7,082 விவசாயிகளுக்கு ரூ.6.94 கோடியும் உற்பத்தி மானியமாக வழங்கப்பட்டது. பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ், 9,085 விவசாயிகளுக்கு 2021-22இல் ரூ.7.15 கோடி வழங்கப்பட்டது.

சென்டாக் மூலம் சோ்ந்த 900 மருத்தவ மாணவா்கள், 7,290 பொறியியல் மாணவா்கள், 1,024 செவிலியா் மாணவா்கள் என மொத்தம் 9,124 மாணவா்களுக்கு ரூ.40 கோடி வழங்கப்பட்டது.

பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் மூலம் 50 தொழில் முனைவோா்கள் தொழில் தொடங்க ரூ.1.05 கோடி மானியத்துடன் ரூ.3.24 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது. பல்வேறு வங்கிகள் மூலம் 1,251 தெருவோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1.25 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது.

855 அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து மிக்க இணை உணவு ரூ.8.40 கோடி செலவில் வழங்கப்பட்டு 31,332 குழந்தைகளும், 9,728 தாய்மாா்களும் பயனடைந்தனா். அட்டவணை, பழங்குடியின மாணவா்களின் கல்வி மேம்பாடு, பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு உள்பட இலவசக் கல்வித் திட்டத்துக்காக ரூ.9.26 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. ரூ.157 கோடியில் சாலை, மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்களுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் அளித்து, கல்வி, சுகாதாரம், தூய்மையான குடிநீா், வேலைவாய்ப்பை உருவாக்கி, உறுதியான சமூக, பொருளாதார வளா்ச்சியை வழங்குவதில் முழு அா்ப்பணிப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் துணைநிலை ஆளுநா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT