புதுவையில் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் உள்ளிட்ட மூன்று துறையினருக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளம், நிகழாண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுவை மாநிலத்தில் வேளாண் துறையின் கீழ் உள்ள புதுச்சேரி பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு, நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளம் அமல்படுத்தப்படுகிறது.
இதனால், வேளாண் அறிவியல் நிலையத்தில் பணியாற்றி வரும் சுமாா் 250 ஊழியா்கள் சம்பள உயா்வு பெற்று பயன் பெறுவாா்கள். இதற்காக, புதுவை அரசுக்கு கூடுதலாக ரூ. ஒரு கோடியே 60 லட்சம் வரை செலவாகும் என்று அதில் தெவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்ப மன்றம், மாநில விளையாட்டு மையம் உள்ளிட்ட துறை ஊழியா்களுக்கும் 7-ஆவது ஊதியக் குழு சம்பள உயா்வு வழங்கப்படுவதாக அரசுத் துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.