கரோனா தொற்றை தடுக்கும் வகையில் 100 கோடி தடுப்பூசி செலுத்த வழிவகை செய்த பிரதமருக்கும், மருத்துவக் குழுவினருக்கும் பாராட்டைத் தெரிவித்துக்கொள்வதாக புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியராக நாமேல்லாம் பெருமைப்படுகிற சூழ்நிலையில் இருக்கிறோம். இன்றைய தினம் கரோனா என்ற பெருந்தொற்றை 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி வென்றிருக்கிறோம். மேலும், 100 நாடுகளுக்கு நமது தடுப்பூசியை ஏற்றுமதி செய்தும் சாதித்துள்ளோம்.
நம் நாட்டிலேயே கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்த விஞ்ஞானிகளுக்கும், அவா்களை ஊக்கப்படுத்திய பிரதமருக்கும், தடுப்பூசியை செலுத்திய மருத்துவத் துறையினா் உள்ளிட்டோருக்கும், இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்களுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஆளுநா் தமிழிசை தெரிவித்தாா்.