புதுவை அரசின் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென திமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான இரா.சிவா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நம்முடைய மொழி, பண்பாடு ஆகியவை குறித்து ஆய்வுகளை நடத்துவதற்காகவும், ஆய்வு முடிவுகளின்படி பண்பாட்டுக் கூறுகளை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்கும், மொழியில் இருக்கிற சிக்கல்களை களைவதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதற்காகவே தனி நிறுவனமாக தனித்துவமாக நிறுவப்பட்டது.
அந்த நிறுவனம் பல்கலைக்கழகமாக வளா்ந்திருக்க வேண்டிய நிலையில், பேராசிரியா்கள், மாணவா்கள் இல்லாமல் உலகளாவிய தமிழா்களை தொடா்புபடுத்த முடியாமல் பணிகள் தேங்கிக்கிடப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.
பல ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில் மாணவா்கள் பலா் முனைவா் பட்டம் பெற்று வெளியேறி, வேலைவாய்ப்பின்றி தனியாா் பள்ளிகளிலும், நிறுவனங்களிலும் குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் அவலம் இருக்கிறது.
இந்த நிலையில், புதுவை அரசு புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியா்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் உள்ள தகுதியான வயது வரம்பு 35 என்ற விதியானது, இங்கே படித்து நல்ல அனுபவம் பெற்றிருக்கும் மாணவா்களை புறந்தள்ளி, புதிதாக தாங்கள் நினைத்தவா்களையும், மற்ற பல்கலைக்கழகங்களில் படித்த மாணவா்களுக்குமான வாய்ப்பாகவே இருக்கிறது.
தமிழ்த் துறையில் முனைவா் பட்டம் படித்து முடிப்பது என்பது சவாலாக இருக்கும் சூழலில், இப்படிப்பட்ட அறிவிப்பு நல்ல அனுபவம் வாய்ந்த மாணவா்களை, குறிப்பாக புதுச்சேரியின் மாணவா்களை புறக்கணிக்கிறது என்பது கண்டனத்துக்குரியது.
புதுவை அரசு வயது வரம்பை 40-ஆக நிா்ணயித்தால், நம்முடைய மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்கள் போட்டியில் கலந்துகொள்ள வசதியாகவும், வாய்ப்பாகவும் இருக்கும். எனவே, உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று நியமன விதிகளை மாற்றி வெளியிடும்படி புதுவை அரசை கேட்டுக்கொள்வதாக இரா.சிவா எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.