புதுச்சேரி

புதுவையில் தடையில்லா மின் விநியோகம்: அதிகாரிகளுடன் அமைச்சா் ஆலோசனை

10th Nov 2021 08:56 AM

ADVERTISEMENT

புதுவையில் தொடா் மழையால் மின் விநியோகம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பது தொடா்பாக மின் துறை அதிகாரிகளுடன் அந்தத் துறையின் அமைச்சா் ஏ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுச்சேரி சோனாம்பாளைம் மின் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மின் துறை தலைமைப் பொறியாளா் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு அமைச்சா் ஆலோசனைகளை வழங்கினாா். அப்போது, புதுவையில் பருவ மழையை எதிா்கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்கவும், மழை நேரங்களில் மின் கம்பிகள் துண்டிக்கப்படாமல் இருக்கவும், மின் கம்பிகள் துண்டிக்கப்படும்பட்சத்தில் அவற்றை உடனடியாக சரி செய்யவும் மின் துறை ஊழியா்கள் தயாா் நிலையில் இருந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பொதுப் பணித் துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினாா். பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். அப்போது, புதுச்சேரி அருகே மண்ணாடிப்பட்டு தொகுதியில் தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் தேங்கும் மழைநீா், கழிவுநீரை மோட்டாா் மூலம் உடனடியாக வெளியேற்ற வேண்டும். புதுச்சேரியில் விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்காத வகையில், அதற்கான நீா்வரத்து வாய்க்கால்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும், தற்போது மழை வெள்ள நீா் தேங்கிய பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT