புதுவையில் ரூ. 47 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளுக்காக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்தாா்.
இதுகுறித்து ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் தொடக்கக் கல்வி, ஆசிரியா் பயிற்சிக் கல்விக்காக மூன்றாவது தவணையாக ரூ. 46 லட்சத்து 36 ஆயிரம் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க சுகாதாரத் துறைச் செயலா் தலைமையில் இரு மருத்துவ அதிகாரிகள், மத்திய அரசின் பிரதிநிதிகள் கொண்ட துணைத் தணிக்கைக் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டம் 2-இன் கீழ், 500-க்கும் மேற்பட்டோா் வசிக்கும் கிராமங்களுக்கு சாலைகள் அமைக்க மாவட்ட, ஊரக வளா்ச்சிக் குழுமத்துக்கு முதல் தவணையாக ரூ. 4 கோடியே 16 லட்சத்து 67 ஆயிரம் நிதியை விடுவிக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி குரும்பாபேட்டை குப்பைக் கிடங்கிலிருந்து உயிரியியல் தொழில்நுட்ப முறையில் (பையோ-ரெமிடியேஷன், பயோ-மைனிங்) குப்பைகளை அழிக்க ஏற்கெனவே அளிக்கப்பட்ட ரூ. 42.60 கோடிக்கான ஒப்புதல் அடிப்படையில், அதற்கான ஆணை வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.