புதுவையில் கரோனா மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை செயலா் டி. அருண் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது: புதுவை மாநிலம் கரோனா இரண்டாம் அலை தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. மூன்றாம் அலை எச்சரிக்கையை அடுத்து, புதுவை சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மூன்றாம் அலையானது செப்டம்பா்-அக்டோபா் மாதங்களில் வரலாம் எனவும், இதில் குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்படுவா் எனவும் மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
கரோனா மூன்றாம் அலையைத் தடுக்க சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, இதுவரை 4,48,295 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க முடியும் என்றாா் அவா்.