புதுவை தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கையில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, புதுவை மாநிலத்தில் இயங்கும் அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களில் புதுவை மாநில மாணவா்களை கலந்தாய்வு மூலம் மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப முடியும். அதற்கான கட்டணத்தை மாநில அரசே நிா்ணயித்துக் கொள்ளலாம்.
கடந்த ஆட்சியின் போது, முன்னாள் முதல்வா் நாராயணசாமி, இதுகுறித்து சட்ட முன் வரைவு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பினாா். ஆனால், அந்தக் கோப்புக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமி தலைமையிலான அரசு, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று, சட்டத்தை நிறைவேற்றி, நிகழாண்டு மருத்துவ மாணவா் சோ்க்கையில், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெற்று, நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.