புதுச்சேரி

புதுவையில் 3.27 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் அளிப்பு

22nd Dec 2021 08:46 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் 3.27 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் மழை நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை, முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா். பொங்கல் பொருள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல்வா் தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் கடந்த நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனா். அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப்படும் என்று, முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

இந்த நிலையில், அறிவித்தபடி மழை நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமைத் தொடக்கிவைத்தாா். புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தட்டாஞ்சாவடி தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு, முதல்வா் என்.ரங்கசாமி மழை நிவாரணத்துக்கான ஆணையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், எஸ்.சந்திரபிரியங்கா, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

பொங்கல் பொருள்கள் வழங்க நடவடிக்கை:

அப்போது, முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் பெய்த பலத்த மழையால் மக்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, அரசு அறிவித்தபடி நிவாரணமாக சிவப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம், மஞ்சள் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4,500 வழங்கப்படுகிறது. குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

மேலும், புதுவையில் பொங்கல் பொருள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு ரொக்கத் தொகையாக வழங்குவதற்குப் பதிலாக இலவச கைலி, சேலைகளை வழங்க உள்ளோம். அமுதசுரபி மூலம் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி: புதுவையில் கரோனா விதிகளைக் கடைப்பிடித்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட அனுமதியளிக்கப்பட்டது. வழக்கம்போல, புதுச்சேரி கடற்கரைச் சாலையிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

புதுவை மாநிலத்தில் மழை நிவாரணத் தொகை சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்கள் 1.85 லட்சம் பேருக்கும், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்கள் 1.42 லட்சம் பேருக்கும் என 3.27 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு மொத்தம் ரூ.156 கோடி அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT