புதுச்சேரி

புதுவையில் நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் திறப்பு: கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

DIN

புதுவையில் திங்கள்கிழமை (டிச.6) முதல் 1- 8ஆம் வகுப்புகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளதையொட்டி, பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித் துறை வெளியிட்டது.

இதுகுறித்து கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகவுடு சனிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை: புதுவை மாநிலம் முழுவதும் பள்ளிகளில் கரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். திங்கள்கிழமை (டிச.6) முதல் 1 - 8ஆம் வகுப்புகளுக்கு முற்பகல் அரை நாள்கள் மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்கும். 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8 ஆகிய வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் செயல்படும்.

9 - 12ஆம் வகுப்புகள் முழு நாளும் செயல்படும். இவற்றில் 9, 11-ஆம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளும், 10, 12-ஆம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் செயல்படும்.

பள்ளிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்புகளை நடத்தி, பாடத் திட்டங்களை முடிக்க வேண்டும். பெற்றோா்கள், தங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் கரோனா தொற்றிருந்தால், பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். ஆசிரியா்களுக்கோ, மாணவா்களுக்கோ கரோனா தொற்று அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். ஆசிரியா்கள், பள்ளி ஊழியா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் ஆசிரியா்கள், மாணவா்கள் முதலில் கைகளைக் கழுவ வேண்டும். உடல் வெப்பப் பரிசோதனை செய்ய வேண்டும். பள்ளி வளாகம், கழிப்பிடங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மாணவா் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது. பள்ளிக்கு வராத மாணவா்களுக்கு இணையவழியில் பாடம் நடத்தலாம்.

வழிபாட்டுக் கூட்டம், கலை நிகழ்ச்சிகள் போன்ற கூட்டம் கூடும் நிகழ்வுகளைத் தவிா்க்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். முழு நேர (9 - 12) வகுப்புகள் உள்ள மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். உணவு வழங்குவதை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள் இதை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT