புதுச்சேரி பாகூா் அருகே வேனில் மணல் கடத்தியதாக அதன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
பாகூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு பின்னாச்சிக்குப்பம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக ஆற்று மணல் ஏற்றி வந்த வேனை போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால், வேனை நிறுத்தாமல் அதன் ஓட்டுநா் வேகமாக ஓட்டிச் சென்று புதுச்சேரி - கடலூா் சாலையில் கன்னியக்கோவில் நான்குமுனை சந்திப்பில் நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றாா்.
அவரை போலீஸாா் துரத்திப் பிடித்து விசாரித்ததில், நோணாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சூா்யா (28) என்பதும், சோரியாங்குப்பம் ஆற்றங்கரையோரப் பகுதியிலிருந்து மணலை கடத்தி, தமிழகப் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ஓட்டுநா் சூா்யாவை கைது செய்ததுடன், மணலுடன் கூடிய வேனையும் பறிமுதல் செய்தனா். இவா் மீது ஏற்கெனவே பாகூா் காவல் நிலையத்தில் மணல் கடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது.