புதுவையில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு டிச.6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என, அந்த மாநில கல்வி அமைச்சா் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு, புதுவையில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் செப்டம்பா் மாதம் திறக்கப்பட்டன. அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
வருகிற 6-ஆம் தேதி முதல் 1 முதல் 8-ஆம் வகுப்புகள் வரை அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இவை சுழற்சி முறையில் செயல்படும்.
அரை நாள் மட்டும் செயல்படும் 9 முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகள், கல்லூரிகள் டிச.6-ஆம் தேதி முதல் முழு நாளும் நடைபெறும்.
பள்ளி மாணவா்களுக்குத் தேவையான சத்துணவு வழங்கப்படும். மாணவா்களுக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.