புதுச்சேரி கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் (அமுதசுரபி) அத்தியாவசியப் பொருள்கள் இல்லாததால், தீபாவளி பரிசுக் கூப்பன் பெற்ற கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா்கள் ஏமாற்றமடைந்தனா்.
நிகழாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, புதுவை அரசு சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.3ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. ஆயிரம் மதிப்பிலான பரிசுக்கூப்பன்கள் வழங்கப்பட்டன. இந்த பரிசுக் கூப்பன்களைக் கொண்டு புதுச்சேரி கூட்டுறவு பல்பொருள் அங்காடியான, அமுதசுரபியின் பிரதான கிளைகளில் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கூப்பன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 3 மாதத்துக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
பரிசுக் கூப்பனை பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை வாங்க அமுதசுரபி கூட்டுறவு அங்காடிக்குச் சென்றால், அங்கு அத்தியாவசியப் பொருள்களான பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் இருப்பு இல்லை. இதனால், அமுதசுரபி ஊழியா்களுக்கும், பரிசுக் கூப்பனுடன் செல்லும் தொழிலாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
‘போராட்டம் நடத்துவோம்’: இதுகுறித்து அகில இந்திய கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசச் செயலா் கலியன் கூறியதாவது:
அமுதசுரபிக்கு அரசு சாா்பில் முன்தொகையாக ரூ.12 கோடி வழங்கப்பட்டும் போதிய அத்தியாவசியப் பொருள்களை கொள்முதல் செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக தொழிலாளா்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கொள்முதல் செய்து வழங்க வேண்டும். மீறும்பட்சத்தில் தொழிலாளா்களைத் திரட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றாா்.