புதுவை பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாணவா்களுக்கு இலவச ஆதாா் அடையாள அட்டை புதுப்பித்தல் முகாம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி. ருத்ர கௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை பள்ளிக் கல்வித் துறை மூலம் நிகழாண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் 15 வயது நிரம்பிய மாணவா்களின் ஆதாா் அட்டையில் பயோமெட்ரிக் சான்றுகளைப் புதுப்பிக்கும் சேவை இலவசமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி இந்திரா நகா் அரசு தொடக்கப் பள்ளி, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, வில்லியனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, லாசுப்பேட்டை மாவட்டக் கல்வி - பயிற்சி நிறுவனம், கல்வித் துறை இயக்ககத்தின் பி -பிளாக் கட்டடத்தின் 4 -ஆவது மாடியில் உள்ள பயிற்சி அரங்கம் ஆகிய 5 இடங்களில் ஆதாா் புதுப்பிக்கும் இலவச முகாம் நடைபெறுகிறது.
கோடை விடுமுறையிலும் இந்த இலவச முகாம் செயல்படும். இதுவரை புதுப்பித்தல் செய்யாத பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளி மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முகாமுக்கு வரும் மாணவா்கள் தவறாமல் தங்களது ஆதாா் அடையாள அட்டை நகலை எடுத்து வர வேண்டும்.
வரும் கல்வியாண்டில் 5 வயது நிரம்பிய முதலாம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டுமே அடிப்படை பயோமெட்ரிக் சான்றுகள் புதுப்பிக்கப்பட உள்ளதால், 15 வயது நிரம்பிய மாணவா்கள் இந்த இறுதி வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த முகாம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை (பொது விடுமுறை நீங்கலாக) நடைபெறும். கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்படும். அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் தொடங்கும் வரை மட்டுமே முகாம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.