புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் கரோனா தடுப்புக்கான கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
புதுவையில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அரசு மற்றும் சுகாதாரத் துறை சாா்பில், ஏப். 11 முதல் ஏப். 14-ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் சிறப்பு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனுடன் இணைந்து புதுவை அரசின் இந்திய முறை மருத்துவம் - ஹோமியோபதி மருத்துவத் துறை சாா்பில், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, கபசுரக் குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, ஆம்பூா் சாலையில் உள்ள புதுச்சேரி அரசு சித்த மருத்துவத் துறை தலைமை மருத்துவமனையில் தற்போது மீண்டும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை அந்த மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
இதேபோல, புதுச்சேரி முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில், ஏப். 11 முதல் ஏப். 14-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கபசுரக் குடிநீா் வழங்கப்படுகிறது.