பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கி வரும் மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரி சாரம் திடலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநிலச் செயலா் ராஜாங்கம் தலைமை வகித்தாா். தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் பெருமாள் கண்டன உரையாற்றினாா். செயற்குழு உறுப்பினா்கள் ராமச்சந்திரன், கலியமூா்த்தி, சீனுவாசன், பிரபுராஜ், மாநிலக் குழு உறுப்பினா்கள் மதிவாணன், சரவணன், ஆனந்த், மணவாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டுக் கழகம், ரயில்வே, பிஎஸ்என்எல், மின் துறை, நிலக்கரி சுரங்கம், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனம் போன்றவற்றை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும், புதுவை அரசு அறிவித்தபடி வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும், தற்போது அதிகளவில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், கரோனா கால நிவாரண நிதியாக அனைத்து குடும்பத்தினருக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.