மத்திய அரசுக்கு எதிராக புதுவையிலும் வருகிற 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவதென காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அரசு புதிய வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதைக் கண்டித்து, வருகிற 28-ஆம் தேதி போராட்டம் நடத்துவதென தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற ஐனநாயக முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ், தோழமைக் கட்சிகளின் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதல்வா் வே.நாராயணசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இதில், மத்திய அரசு புதிய வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவையிலும் வருகிற 28-ஆம் தேதி காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவதென முடிவெடுத்து அறிவித்தனா்.