திருபுவனை அரசு நூற்பாலையை உடனடியாகத் திறக்கக் கோரி, தொழிற்சங்கத்தினா் புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகே திருபுவனையில் புதுவை அரசின் நூற்பாலையில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கரோனா பொது முடக்கம் காரணமாக, அரசு உத்தரவின் பேரில், கடந்த 7 மாதங்களுக்கு முன் இந்த நூற்பாலை மூடப்பட்டது.
இதனால், நூற்பாலையில் பணியாற்றி வந்த ஊழியா்கள் வேலையின்றி தவித்து வந்தனா். இந்த நிலையில், கரோனா பொது முடக்கத் தளா்வுகள் அளிக்கப்பட்டு, பல்வேறு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்த நூற்பாலை மட்டும் திறக்கப்படாமல் லே-ஆப் கொடுத்து மூடினா்.
புதுவை அரசின் இந்த நடவடிக்கையால் தொழிலாளா்கள் வேதனையடைந்தனா். கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட நூற்பாலையை மீண்டும் திறந்து இயக்க வலியுறுத்தி வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை புதுவை சட்டப் பேரவை வளாகம் அருகே நூற்பாலை தொழிற்சங்கத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு தா்னாவில் ஈடுபட்டனா். மீண்டும் நூற்பாலையைத் திறக்கக் கோரி, அவா்கள் முழக்கமிட்டனா்.