புதுவையில் கட்டடங்களுக்கு அனுமதி பெற புதிய மென்பொருள் வசதியுடன் கூடிய இணையவழி திட்டத்துக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
புதுவை அரசின் நகர-கிராம அமைப்புத் துறை, தனியாா் அறக்கட்டளையுடன் இணைந்து இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம், நகர-கிராம அமைப்புத் துறை அமைச்சா் நமச்சிவாயம் முன்னிலையில், வெள்ளிக்கிழமை பரிமாறிக் கொள்ளப்பட்டது.
நகரத் திட்டமிடல் துறைச் செயலா் மகேஷ், தலைமை நகர அமைப்பாளா் சத்தியமூா்த்தி, முதுநிலை நகர அமைப்பாளா் ஸ்ரீதரன், புதுச்சேரி நகர அமைப்பு குழும உறுப்பினா் செயலா் கந்தா்செல்வன், நிக் அதிகாரி ராஜசேகா், இ-கவ் அறக்கட்டளை துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.
இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தப்படி, கட்டட வரைபடங்களை ஆய்வு செய்வதற்கு ஒருங்கிணைந்த முழுமையான தானியங்கி ஆய்வு மென்பொருளை அறக்கட்டளை இலவசமாக வழங்கும். இதன் மூலம் மக்கள் தங்கள் கட்டட வரைபட அனுமதி விண்ணப்பங்களை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலையை மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதனிடையே, மத்திய அரசின் வீட்டு வசதி-நகர விவகாரங்கள் அமைச்சகம், முழுமையான இணையவழி கட்டட அனுமதி திட்டத்தைக் கொண்டு வர புதுவை அரசுக்கு பரிந்துரை செய்தது.
எனவே நிக் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இணையவழி கட்டட அனுமதி திட்டத்துடன், இ-கவ் அறக்கட்டளையின் தானியங்கி மென்பொருளை இணைத்து, ஒருங்கிணைந்த முழுமையான இணையவழி கட்டட அனுமதித் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.