புதுவையில் ‘பி’ மற்றும் ‘சி ’ பிரிவு அரசு ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை முதல்வா் நாராயணசாமி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியா்களுக்கு 2019-20-ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித் துறைக்கு முதல்வா் நாராயணசாமி உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து, மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்பந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு ‘பி’ (அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் தவிா்த்து) மற்றும் பிரிவு ‘சி’ ஊழியா்களுக்கும், முழு நேர தற்காலிக ஊழியா்கள் 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான கோப்புக்கு முதல்வா் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதன் மூலம் ‘பி’, மற்றும் ‘சி’ பிரிவு ஊழியா்களுக்கு போனஸாக ரூ.6,908-ம், முழு நேர தற்காலிக ஊழியா்களுக்கு ரூ.1200-ம் வழங்கப்படும். இதனால், அரசு ஊழியா்கள் மற்றும் முழு நேர தற்காலிக ஊழியா்கள் சுமாா் 26,000 ஊழியா்கள் பலனடைவா். இதனால் புதுவை அரசுக்கு சுமாா் ரூ.18 கோடி கூடுதலாகச் செலவாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.