கடலில் காணாமல் போன காரைக்கால் மீனவர்கள் 30 பேரை, கடலோர காவல் படை உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் புதன்கிழமை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.தொடர்ந்து புயல் கரையை கடக்கும் தினமான புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுவை வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது: புதுவையில் புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் நிவர் புயல் கரையை கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்பட முடுக்கிவிட்டுள்ளோம்.
புயலை வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு யாரும் வரக்கூடாது. மரங்கள், மின்கம்பங்கள் காற்றில் சாய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வியாழக்கிழமை பேருந்துகள் இயக்கப்படாது.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். புதுச்சேரியில் இருந்து சென்றவர்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். காரைக்காலில் 83 படகுகளில் மீன்பிடிக்க சென்றவர்களில் 10 பேர் திரும்பியுள்ளனர்.
48 பேர் கோடியக்கரையிலும், 5 பேர் ஆந்திராவிலும் பாதுகாப்பாக உள்ளனர். மீதமுள்ள 30 பேரை பற்றி தகவல் இல்லை. கடலோர பாதுகாப்புப் படைக்குத் தகவல் தெரிவித்து அவர்களை பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். புயல் கரையை கடக்கும் முன்பு அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்கள் என்று நம்புகிறோம்.
புதுவையில் புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. புதுவையில் 196 நிவாரண முகாம்களும், காரைக்காலில் 50 முகாம்களும் அமைத்துள்ளோம். இங்கு தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்றார் அமைச்சர் ஷாஜகான். இக்கூட்டத்தில் வருவாய்த்துறை செயலர் அ.அன்பரசு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.