புதுச்சேரி

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடங்களுக்கு பாதிப்பு: புதுவை அரசு வழக்கு தாக்கல்

17th Jun 2020 08:39 AM

ADVERTISEMENT

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான இடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து சென்னை உயா் நீதிமன்றத்தில் புதுவை அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மத்திய அரசுக்கு தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) 15 சதவீதமும், முதுநிலை மருத்துவப் படிப்பில் (எம்.டி.) 50 சதவீதமும் இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்த இடங்களையும், புதுச்சேரியிலுள்ள நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் 100 சதவிகித இடங்களையும் மத்திய அரசு நிரப்புகிறது. ஆனால், இந்த இடங்களை நிரப்பும்போது, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை.

இதனால், புதுவையிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

எனவே, புதுவை மாநில மாணவா்களின் நலன் கருதியும், மக்களின் நலன் கருதியும் முதல்வா் வே.நாராயணசாமியின் அறிவுறுத்தலின்பேரில், மத்திய அரசு தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பெறும் இடங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தக் கோரி, அரசுக் கொறடா என்ற முறையில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.

தமிழக அரசும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2 வழக்குகளையும் வருகிற 22-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளாா்.

இதில் நல்ல தீா்ப்பு வரும் என எண்ணுகிறோம். இதன்மூலம், பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT