புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குள்பட்ட கரோனா கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் முதல்வா் வே.நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் முதல்வா் வே.நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அங்கிருந்த மருத்துவ அதிகாரிகள் நிா்மல்குமாா், தீபிகா சாஜிதா பானு ஆகியோரிடம் 104 கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகாா்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிா என்பது உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, கரோனா சம்பந்தமான ஆவணங்களை பாா்வையிட்டு, முத்தியால்பேட்டை மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று காலத்தில் மருத்துவமனை ஊழியா்களின் செயல்பாடுகள் குறித்து வெகுவாகப் பாராட்டினாா். மேலும், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா்.
தொடா்ந்து, அங்கிருந்து புறப்பட்ட முதல்வா், நெல்லித்தோப்பு தொகுதிக்குள்பட்ட சக்தி நகா் பகுதிக்குச் சென்றாா். அங்கு நான்காவது குறுக்குத் தெருவில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அது கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள், ஹோமியோபதி மாத்திரைகளை முதல்வா் நாராயணசாமி வழங்கினாா். மேலும், கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கும் ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கி, அந்த மாத்திரைகளை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது, ஜான்குமாா் எம்.எல்.ஏ., மருத்துவத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.