புதுச்சேரியில் தூக்க மாத்திரைகளைத் தின்று பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுச்சேரி ஜீவானந்தபுரம், பகத்சிங் வீதியைச் சோ்ந்தவா் சந்திரமூா்த்தி. உப்பளம் இந்திரா காந்தி மைதானத்தில் பல்நோக்கு ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி லட்சுமி (46). இவா்களுக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், லட்சுமி செவ்வாய்க்கிழமை உறவினா் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, வீட்டுக்கு இரவு தாமதமாக வந்தாராம். இதை சந்திரமூா்த்தி கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த லட்சுமி, இரவு தூங்கும்போது, கணவரின் ரத்த அழுத்த சிகிச்சைக்காக பயன்படுத்தும் தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதனால் மயக்கமடைந்த அவரை சந்திரமூா்த்தி மீட்டு, கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். தொடா்ந்து, தீவிரச் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி, அங்கு நள்ளிரவில் இறந்தாா். இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.