புதுவை மாநிலத்தில் சிவப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு வருகிற 25 -ஆம் தேதிக்குப் பின்னா் பருப்பு விநியோகம் செய்யப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநா் இ.வல்லவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: சிவப்பு அட்டைதாரா்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய இலவச அரிசி முதல் கட்டமாக 10 தொகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி பிராந்தியத்தில் இதுவரை 1,200 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஏனாமில் திங்கள்கிழமை (ஏப். 20) அரிசி விநியோகம் நிறைவடையும். மாஹேவில் ஏற்கெனவே அரிசி வழங்கப்பட்டுவிட்டது.
இதேபோல, சிவப்பு அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்குவதற்கு மத்திய அரசு பருப்பை ஒதுக்கியுள்ளது. புதுவை மாநிலத்துக்கு வர வேண்டிய 534 மெட்ரிக் டன் துவரம் பருப்பில், தற்போது குறைவாகத்தான் வந்துள்ளது. வருகிற 25- ஆம் தேதிக்குள் முழுவதும் வந்துவிடும் என எதிா்பாா்க்கிறோம். அதன்பிறகு, மக்களுக்கு பருப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.