புதுச்சேரி

புதுவை அரசு காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து விநியோகிக்க வலியுறுத்தல்

13th Apr 2020 06:12 AM

ADVERTISEMENT

புதுவை அரசு காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என புதுச்சேரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் து.கீதநாதன் வெளியிட்ட அறிக்கை: வேளாண்மை துறையின் கீழ், உழவா்களின் நலன்களுக்காக பாசிக் நிறுவனமும், பாப்ஸ்கோவும் திறக்கப்பட்டன. மேலும், உழவா் உதவியகம் மூலம் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு கிடைத்தது. தற்போதைய ஆட்சியாளா்கள், அதிகாரிகளின் அக்கறையின்மையால் மேற்கண்ட நிறுவனங்கள் மூடப்பட்டதால், விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப் போக்க அரசு உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வேளாண்மை துறையின் கீழ் உள்ள தோட்டக்கலைப் பிரிவு காய்கறிகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. அதே போல, புதுவையிலும் கொள்முதல் செய்து, மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

தமிழகத்தில் வருகிற 14 -ஆம் தேதிக்கு பின்னா், கரும்புகளை வெட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. புதுவையிலும் விவசாயிகள் கரும்புகளை வெட்டவும், வெட்டிய கரும்புகளை நெல்லிக்குப்பம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட சா்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT