விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடும் புதுவை மாநில கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.
இந்த அணியை கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி (சி.ஏ.பி.) தேர்வு செய்து அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்த அணியின் கேப்டனாக ரோகித், துணை கேப்டனாக பேபிட்
அகமது ஆகியோர் செயல்படுவர்.
இதுகுறித்து சி.ஏ.பி. செயலர் (பொ) சந்திரன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவை அணி சிறப்பான நிலையில் உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் புதுவை அணி சிறப்பாக விளையாடியது. கர்நாடக ஆல்ரவுண்டர் வினய்குமார் புதுவை அணிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார்.
புதுவை அணியில் அருண் கார்த்திக், பராஸ் டோக்ரா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். விஜய் ஹசாரே கோப்பைக்காக வருகிற 24-ஆம் தேதி அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக புதுவை அணி விளையாடவுள்ளது.
மிசோரம், உத்தரகாண்ட், சிக்கிம், மேகாலயா, மணிப்பூர், அசாம், நாகலாந்து ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. ரஞ்சி டிராபியில் அறிமுகமான புதுவை அணி சிறப்பாக விளையாடி, தேசிய அளவில் 3-ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.
புதுவை அணி வீரர்கள் விவரம்: ரோகித் (கேப்டன்), பேபிட் அகமது (துணை கேப்டன்), வினய்குமார், பராஸ் டோக்ரா, அருண் கார்த்திக், கார்த்திக், ஆனந்த் சுப்பிரமணியன், விக்னேஸ்வரன், சுரேஷ்குமார், சாகர் திரிவேதி, சாந்தமூர்த்தி, ஆஷித்ராஜீவ், சாகர் உதேஷி, இக்லாஸ்நாகா, அப்துல் சபர்.
கூடுதல் வீரர்கள்: அரவிந்த் ராஜ், பிரதீபன், தாமரை கண்ணன், நிதீஷ்சலேகர், ரகுபதி.
பயிற்சியாளர்கள்: அருண்குமார் (தலைமைப் பயிற்சியாளர்), திசாந்த் யாக்னிக் (பீல்டிங் பயிற்சியாளர்), வேல்முருகன் (உதவி பயிற்சியாளர், மேலாளர்), கார்த்திக் தசான் (பிசியோதெரபிஸ்ட்), சஞ்சிப் செளத்ரி (பயிற்சியாளர்), ஆல்ட்ரின் (மசாஜர்), ஹரிசங்கர் (விடியோ ஆய்வாளர்).