புதுச்சேரி திப்புராயப்பேட்டையில் மின் விசிறியை பழுது பார்த்தபோது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
புதுச்சேரி திப்புராயப்பேட்டை லாசர் வீதியைச் சேர்ந்தவர் இளங்கோ (47). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். திருவிழாக்களுக்கு பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்த இளங்கோ, பட்டாசு வாணவேடிக்கை நிகழ்த்துதல் உள்பட பல்வேறு பணிகளையும் செய்து வந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அவரது வீட்டுக்கு எதிரில் உள்ள வீட்டில் மின்விசிறி இயங்கவில்லை. இதையறிந்த இளங்கோ, அங்கு சென்று மின் விசிறியை பழுது பார்த்தார்.
அப்போது, சுவிட்ச் இணைப்பில் இருந்த வயரை எடுத்து கடித்து இழுத்தபோது, இளங்கோ மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததாகத் தெரிகறது.
இதில், தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இளங்கோ ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.