மரக்காணம் தம்பதிக்குப் பிறந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (34). கட்டடத் தொழிலாளி. இவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது அக்காள் மகள் திவ்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
இதைத் தொடர்ந்து, திவ்யா மீண்டும் கர்ப்பமடைந்தார். அவருக்கு கடந்த 16-ஆம் தேதி புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் அந்தக் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், பெற்றோர் குழந்தையை தீவிர சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்துவிட்டதாகக் கூறி சவக்கிடங்கில் வைத்துவிட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் தன்வந்திரி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, குழந்தையின் சடலம் உடல்கூறு பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.