உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று புதுவை மாநில உள்ளாட்சிக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுவை அரசின் உள்ளாட்சித் துறைச் செயலர், இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோருக்கு அந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜெகநாதன் வியாழக்கிழமை அனுப்பிய மனுவின் விவரம்:
புதுவையில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் காலம் கடந்த 2011-ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. மாஹே, ஏனாம் தவிர்த்து புதுச்சேரி - காரைக்காலில் உள்ள 10 கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குள் அடங்கிய கிராம பஞ்சாயத்துகளில் 73-ஆவது (திருத்தம்) சட்டப் பிரிவு ஏ-வின்படி கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் ஆகியோர் பதவி வகிக்காத நிலையில், கிராம சபைக் கூட்டங்களை முக்கிய தினங்களான சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜயந்தி, மே தினம் ஆகிய 4 நாள்களில் கூட்டுவதற்கான குறிப்பாணை ஆண்டுதோறும் தங்களது துறைகள் மூலம் பிறப்பிக்கப்பட்டு, பொய்யான, அரசியல் சட்டத்துக்கு எதிராகக் கூட்டங்களைக் கூட்டுவதும், அதன் மூலம் தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்புவதும் ஜனநாயக மாண்புகளுக்கு உகந்த செயல் அல்ல.
மேலும், கடந்த காலங்களில் கிராம சபைக் கூட்டங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் முடக்கி வைத்திருக்கும் நிலையில், கிராம சபைக் கூட்டங்களை தங்களது துறைகள் கூட்டுவது சரியானதல்ல. சட்டப்படி தவறான நடவடிக்கையாகும். எனவே, உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்.
மக்களுக்கு அதிகாரம் வழங்கவும், ஜனநாயகத்தை விரிவுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, புதுவை ஒன்றியத்து ஆட்சிப் பரப்பில் கிராம சபைக் கூட்டங்களை தங்களது துறைகள் நடத்தினால், இதற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தப்படும். மேலும், தங்களது துறை அலுவலகங்கள் எதிரே பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.