புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்திரா காந்தி சிலை அருகே தொடங்கிய கையெழுத்து இயக்க நிகழ்வுக்கு கட்சியின் மாநிலச் செயலர் ராஜாங்கம் தலைமை வகித்தார். தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் சரவணன், மாதர் சங்கச் செயலர் சந்திரா, விவசாயிகள் சங்கச் செயலர் சங்கர் ஆகியோர் பேசினர். அப்போது, மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதக அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், பயணிகள், மாணவர்களிடம் புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறக் கோரி, கையெழுத்து பெறப்பட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற முடிவு செய்யப்பட்டது.
இதில் திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.