மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என புதுவை மாநில மாணவர்கள் - பெற்றோர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் வை.பாலா வெளியிட்ட அறிக்கை: மத்திய மருத்துவக் குழு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாளாக செப்டம்பர் 7- ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது. புதுவை மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி (136 இடங்கள்), (ஸ்ரீ மணக்குள விநாயகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா, பிம்ஸ்) 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் (165) உள்ள இடங்களைச் சேர்த்து மொத்தம் 301 அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் உள்ளன.
இதேபோல, மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரி (29 இடங்கள்), வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்), மாஹே பல் மருத்துவக் கல்லூரி (35 இடங்கள்) ஆக மொத்தம் 116 அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் உள்ளன. புதுவை அரசால் நடத்தப்படும் சென்டாக் மருத்துவ கலந்தாய்வுக்கு எந்தவித தடை ஆணையும் இல்லை. எனவே, புதுவை அரசு, சுகாதாரத் துறை, சென்டாக் நிர்வாகம் ஆகியவை இணைந்து புதுவை மாணவர்களின் நலன் கருதி, காலம் தாழ்த்தாமல் மருத்துவம், பல் மருத்துவ தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.