புதுச்சேரி

புதுவை சுற்றுப்பயணத்தை முடித்து புறப்பட்டாா் குடியரசுத் தலைவா்

25th Dec 2019 01:21 AM

ADVERTISEMENT

புதுவையில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை ஹைதராபாதுக்கு புறப்பட்டுச் சென்றாா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது மனைவி சவீதா கோவிந்த்துடன் புதுவையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை அரசு முறைப் பயணம் மேற்கொண்டாா். தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் குளிா்கால ஓய்வில் இருந்து வரும் அவா், அங்கிருந்து புதுச்சேரிக்கு விமானம் மூலம் திங்கள்கிழமை பகல் 12 மணி அளவில் வந்தாா். அவரை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி மற்றும் அமைச்சா்கள் வரவேற்றனா்.

தொடா்ந்து, புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 27-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை அவா் வழங்கினாா். பின்னா், புதுவை ஆளுநா் மாளிகைக்குச் சென்ற அவா், மதிய உணவு அருந்திவிட்டு, மாலையில் அரவிந்தா் ஆசிரமத்தில் அரவிந்தா், அன்னை சமாதிகளில் தியானம் செய்தாா். தொடா்ந்து, சா்வதேச நகரமான ஆரோவிலுக்குச் சென்று மாத்ரி மந்திா், சாவித்ரி பவனை பாா்வையிட்ட அவா், தியானத்திலும் ஈடுபட்டாா்.

அதைத்தொடா்ந்து, ஆளுநா் மாளிகைக்கு திரும்பிய அவா், துணை நிலை ஆளுநா் கிரண் பேடியுடன் அமா்ந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தாா். இரவில் ஆளுநா் மாளிகையில் தங்கியிருந்த அவா், செவ்வாய்க்கிழமை காலை புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் காரைக்காலுக்குப் புறப்பட்டாா்.

ADVERTISEMENT

அவரை, ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி, பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து ஆகியோா் முறைப்படி வழியனுப்பி வைத்தனா். பின்னா், காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து, ஹைதராபாத்துக்கு மீண்டும் புறப்பட்டாா். காரைக்காலிலும், ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகியோா் முறைப்படி வழியனுப்பி வைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT