புதுச்சேரி

புதுவை பட்ஜெட் இன்று தாக்கல்

28th Aug 2019 08:48 AM

ADVERTISEMENT

புதுவை பட்ஜெட்டை சட்டப் பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி புதன்கிழமை (ஆகஸ்ட் 28) தாக்கல் செய்கிறார்.
புதுவையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில், கடந்த ஜூலை 13-இல் மாநில திட்டக் குழு கூட்டப்பட்டு, ரூ.8,425 கோடியிலான பட்ஜெட் தொகை உறுதி செய்யப்பட்டது. அந்தக் கோப்பு ஜூலை 19-ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒப்புதல் கிடைத்தது.
இந்த நிலையில், புதுவை சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் கிரண் பேடி உரையுடன் 
திங்கள்கிழமை தொடங்கியது. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடரை எவ்வளவு நாள்கள் நடத்துவது என்பது குறித்து பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்குழுக் கூட்டத்தில், வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி வரை மொத்தம் 11 நாள்கள் சட்டப் பேரவையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாநில நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் வே.நாராயணசாமி, புதுவை பட்ஜெட்டை புதன்கிழமை (ஆகஸ்ட் 28) தாக்கல் செய்கிறார்.
இதையடுத்து, வருகிற 31-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக கூட்டம் நடைபெறும். செப்டம்பர் 1, 2-ஆம் தேதிகள் விடுமுறை நாள்கள் என்பதால், அன்றைய தினங்களில் பேரவைக் கூட்டம் நடைபெறாது. அதைத் தொடர்ந்து, 3-ஆம் தேதியிலிருந்து 7-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக கூட்டம் நடைபெறும் என பேரவை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT