பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகள் 747 பேருக்கு கல்வி உதவித் தொகை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
முனுசாமி நாயகர் - மு.ஜெயலட்சுமி அம்மாள் வன்னியர் கல்வி விருத்தி சங்கம் சார்பில், புதுச்சேரியைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2018-19 ஆம் கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அந்தச் சங்கத் துணைத் தலைவர் ஆர்.துளசி, தலைமை வகித்தார். செயலர் எல்.பரமசிவம் வரவேற்றார். பேராசிரியர் எ.மு.ராஜன், சங்கத் துணைச் செயலர் த.குணசேகரன், சங்க நிர்வாகிகள் ஞானபிரகாசம், சம்பந்தம், குலசேகரன், க.காத்தவராயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 702 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 45 மாணவ, மாணவிகளுக்கு தலா 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேல்விழியன், செ.கிருபானந்தம், ரங்கநாதன், பலராமன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், திரளான மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சங்கப் பொருளாளர் வேல்விழியன் நன்றி கூறினார்.