புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் சிந்தனை அரங்கம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரவைத் தலைவர் கோ. செல்வம் தலைமை வகித்தார். செயலர் எஸ். குமாரகிருஷ்ணன் தலைமை வகித்தார். தாகூர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் பி. ரவிச்சந்திரன், புதுச்சேரி தொல்லியல் பெருமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதையடுத்து, நாடு என்ற தலைப்பில் திருக்குறள் கவியரங்கம் நடைபெற்றது.
கூட்டத்தில் காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து காஷ்மீரை மாநிலமாகவும், லடாக் பகுதியை மத்திய அரசு ஆட்சிப் பகுதியாகவும் உருவாக்கியது போல, புதுச்சேரியை மாநிலமாகவும், காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளை தனித் தனி மத்திய அரசு ஆட்சிப் பகுதிகளாகவும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். புறநகர் பகுதிகளில் புதை வடிகால் பணிகள் முடிந்து பல ஆண்டுகளாகியும், இணைப்புக் கொடுக்கப்படவில்லை. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு இணைப்புகளை வழங்க வேண்டும். கோயில் திருவிழாக்கள், அரசியல் விழாக்களுக்கு பெருமளவில் மின் திருட்டு நடைபெற்று வருகிறது. இவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.