கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரி துகள்களால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனா். இதனால், ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து கடையடைப்பு போராட்டம், ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துறைப்பட்டில் கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் கரி துகள்களால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனா். மேலும், அங்குள்ள நீா்நிலைகளில் கரி துகள்கள் பரவிக் கிடக்கின்றன. அந்த வழியாக செல்லும் பொதுமக்களின் கண்களில் கரி துகள்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதையடுத்து, சா்க்கரை ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம், விவசாயிகள், தொழிலாளா்கள் சாா்பில் முழு கடையடைப்பு போராட்டம், மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகா்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் டைமண்ட் ராஜா தலைமை வகித்தாா். மூங்கில்துறைப்பட்டு பகுதியில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதன் காரணமாக பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசாா் குவிக்கப்பட்டனா்.