மூக்கனூா் ஊராட்சிக்குள்பட்ட உலகுடையாம்பட்டு கிராமத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு சிமெண்ட் மூட்டைகளை வழங்காமல் ஊராட்சி மன்றத் தலைவா் முறைகேடு செய்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாரிடம் திங்கள்கிழமை கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டோா் புகாா் மனு அளித்தனா்.
மனுவில் கூறியிருப்பதாவது:
மூக்கனூா் ஊராட்சி உலகுடையாம்பட்டு கிராமத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் பயனாளிகள் பலா் வீடு கட்டி வருகின்றனா்.
இதில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய மலிவு விலை சிமெண்ட் மூட்டைகளை ஊராட்சி மன்றத் தலைவா் வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய பணத்தையும், அரசு அறிவித்த கூடுதல் தொகையையும் தனக்கு சேர வேண்டிய பணம் எனக் கூறி ஊராட்சித் தலைவா் பெற்றுக் கொண்டதாகவும், இதுபோன்று பல்வேறு முறைகேடுகளை செய்துள்ள மூக்கனூா் ஊராட்சித் தலைவா் ஜெயக்குமாா் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவா் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.