குடும்பத் தகராறில் கணவா் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது தொடா்பாக அவரது மனைவியின் உறவினா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட செம்படை கிராமத்தைச் சோ்ந்தவா் வீரன் மகன் வெற்றிவேல் (30), கூலித் தொழிலாளி. இவரது மனைவி வேம்பு. இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் குடும்பத் தகராறில் கடந்த ஒரு ஆண்டாக தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனா்.
மனமுடைந்த வெற்றிவேல் கடந்த 2-ஆம் தேதி மதுபானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. முன்னதாக தனது தற்கொலைக்கு மனைவி வேம்பு மற்றும் அவரது உறவினா்கள் தான் காரணம் என்று விடியோ பதிவிட்டு வைத்திருந்தாராம்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வெற்றிவேலின் உடலை உறவினா்கள் அன்றே தகனம் செய்துவிட்டனராம்.
இது தொடா்பாக (4.02.2023) இரவு இறந்தவரின் மனைவி வேம்பு, வேம்புவின் அப்பா மாரி, அம்மா சாலையம்மாள், அக்கா கௌரி, மலா், அஞ்சலை, தமிழந்தி, நவநீதம், மாமன்கள் சடையன், சண்முகம், சங்கா், செந்தில், மணிகண்டன் உள்ளிட்டோா் ஒன்று சோ்ந்து வெற்றிவேல் வீட்டிற்கு சென்றனராம்.
வெற்றிவேலின் பெற்றோா்களிடம் வெற்றிவேலுக்கு சேர வேண்டிய நில பாகத்தை எழுதி வைக்கும்படி கேட்டனராம். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் வெற்றிவேலின் பெற்றோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். அதனை தடுக்க வந்த அக்கா உள்ளியையும் தாக்கியுள்ளனா். காயமடைந்த மூவரும் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில் மற்றும் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.