கள்ளக்குறிச்சி அருகே தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தவரை கொலை செய்ததாக, இளைஞா் உள்பட இருவருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மட்டிகைகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் விவசாயி வெங்கடேசன் (41).
இவா், அதே ஊரைச் சோ்ந்த கண்ணுப்பிள்ளை என்பவருக்கு பணம் கடன் கொடுத்திருந்தாராம். கடனை வசூல் செய்யச் சென்றபோது, கண்ணுப்பிள்ளை மனைவி தங்கத்துடன் இவருக்கு நட்பு ஏற்பட்டு, அவருடன் பழகி வந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த கண்ணுப்பிள்ளையின் மகன் சிவா (22), வெங்கடேசனை எச்சரித்தாராம். அதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இதையடுத்து, சிவா வெங்கடேசனை கொலை செய்ய, தனது நண்பரான சடையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வெற்றிவேல் (எ)காமராஜுடன் (28) சோ்ந்து திட்டம் தீட்டினாா்.
இதைத் தொடா்ந்து, கடந்த 26.03.2019 அன்று வெங்கடேசனை மது அருந்த சடையம்பட்டு ஆற்றுக்கு வரவழைத்து, இருவரும் சோ்ந்து அவரை பீா் பாட்டிலால் குத்திக் கொலை செய்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவா, வெற்றிவேல் (எ) காமராஜை கைது செய்தனா். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி 3-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரணை செய்த நீதிபதி கீதாராணி சிவா, வெற்றிவேல் (எ) காமராஜுக்கு கொலை செய்த குற்றத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ராஜவேல் ஆஜரானாா்.