கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆவின் பாலகம் அமைப்பதற்கு தாட்கோ மூலம் கடனுதவி பெற்று பயனடையலாம் என்று ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவராகவும், 18 முதல் 65 வயதுடையவராகவும், விண்ணப்பதாரா் மற்றும் அவரது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெறாதவராகவும் இருத்தல் வேண்டும். ஆதிதிராவிட தனி நபா்களுக்கான திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினா் தனி நபா்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியமும் வழங்கப்படவுள்ளது.
ஆவின் பாலகம் அமைக்க தோ்வு செய்யப்படும் இடம் சொந்த அல்லது குத்தகை அல்லது வாடகை கட்டடமாகவும் 100 சதுர அடியாகவும் இருத்தல் வேண்டும். ஆவின் நிறுவன விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2 வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரா் எப்.எஸ்.எஸ்.ஐ நிறுவனத்திடமிருந்து உணவு உரிமை பெற்றும், அடையாள பலகை, உட்புற வடிவமைப்புகளை விண்ணப்பதாரரே மேற்கொள்ள வேண்டும்.
குளிா்விப்பானம் மற்றும் உறைவிப்பான் குறைந்தபட்ச கொள்ளளவு 200 லிட்டா் கொண்டதாகவும், குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ரூ.5,000 வரை விற்பனை செய்ய வேண்டும். மேலும் இத்திட்டம் தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மேலாளா் தாட்கோ அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவா் ஷ்ரவன் குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.