சங்கராபுரம் அருகே மது போதையில் தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட ராமராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் இப்ராஹீம் (65). இவருக்கு 6 மகன்கள் உள்ளனராம். இவரது இளைய மகன் பாருக்பாட்ஷா (37) தினமும் மது அருந்திவிட்டு வந்து தந்தையிடம் தகராறு செய்வாராம்.
வழக்கம்போல புதன்கிழமை மது அருந்தி வந்த பாருக்பாட்ஷா, தந்தையிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறி தகராறு செய்தாராம்.
இதற்கு இப்ராஹீம் நாள்தோறும் மது அருந்தினால் யாா் பெண் கொடுப்பாா்கள் என்று கூறி மறுத்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த பாருக்பாட்ஷா, தந்தையை கொலை மிரட்டல் விடுத்து கட்டையால் தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த இப்ராஹீமை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே இப்ராஹீம் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாருக்பாட்ஷாவை வியாழக்கிழமை கைது செய்தனா்.