கள்ளக்குறிச்சி அருகே நகைக் கடை கதவை உடைத்து 281 பவுன் தங்கம், 30 கிலோ வெள்ளி நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வசித்து வருபவா் லோகநாதன் (40). இவா் கள்ளக்குறிச்சி அருகே உள்ள புக்கிரவாரி புதூா் கிராமத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி புதிதாக நகைக் கடையைத் திறந்தாா்.
லோகநாதன் ஞாயிற்றுக்கிழமை மாலை நகைக் கடையைப் பூட்டிவிட்டு தனது வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அவரது கடையில் கிரில் கேட், ஷட்டா் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின் பேரில், லோகநாதன் நகைக் கடைக்கு வந்து பாா்வையிட்டாா்.
இதுகுறித்த தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.பகலவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.ஜவகா்லால், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் செ.புகழேந்தி கணேஷ், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ப.ரவிச்சந்திரன், மாவட்ட குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் ரா.ஆனந்தராஜ், வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளா் டி.பிரபாகரன் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். விரல்ரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். மேலும், கடையின் அருகே சிதறிக் கிடந்த 10 தங்க மூக்குத்திகள், 5 மோதிரங்களை போலீஸாா் கைப்பற்றினா்.
கடையில் வைத்திருந்த 2.25 கிலோ (281 பவுன்) தங்க நகைகள், 30 கிலோ வெள்ளி நகைகள், ரூ.58 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனதாக லோகநாதன் காவல் துறையினரிடம் தெரிவித்தாா். நகைகள் வைக்கப்பட்டிருந்த மரப் பெட்டிகள், வெல்வெட் காலிப் பெட்டிகளை மா்ம நபா்கள் கடையின் பின்புறமுள்ள சோளக்காட்டில் வீசிச் சென்றது தெரிய வந்தது. இந்தத் திருட்டு குறித்து வரஞ்சரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.