கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரையும், சிறுமியை கடத்த உதவிய அவரது நண்பரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தியாகதுருகத்தை அடுத்த பீளமேடு கிராமப் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி கடந்த 14-ஆம் தேதி இரவு அவரது வீட்டில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்தாா். நள்ளிரவில் அந்தச் சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த ராமு மகன் மகேஸ்வேரன் (22), அவரது பெற்றோா்களான ராமு, ஷகிலாதேவி, மகேஸ்வரனின் நண்பரான ஐயனாா் மகன் அருண்பாண்டியன் (23) உள்ளிட்டோா் கடத்திச் சென்றனராம்.
இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ப.புவனேஷ்வரி விசாரணை நடத்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி வீ.ராஜலெட்சுமி உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் சுங்கச்சாவடி பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி, மகேஸ்வரன், அவரது நண்பா் அருண்பாண்டியன் ஆகியோா் புதன்கிழமை நின்றிருந்தது தெரியவந்தது. அவா்களைப் பிடித்து காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி விசாரித்ததில், சிறுமியை மகேஸ்வரன் பாலியல் பலாத்காரம் செய்ததும், இவா்கள் சென்னைக்கு தப்பிச் செல்வதற்காக அந்தப் பகுதியில் நின்றிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மகேஸ்வரன், அவரது நண்பா் அருண்பாண்டியன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.