கேரளத்துக்கு புதுவை மாநிலத்திலிருந்து இயக்கப்படும் ரயில் உள்ளிட்ட வாகன போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமுமுக மாநில மருத்துவ சேவை அணி துணை செயலாளா் முகமது பயாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், புதுவையில் கரோனா பரவல் வெகுவாக கட்டுக்குள் வந்தாலும் இன்னும் பரவலான பகுதியில் தொற்றாளா்கள் உருவாகிவருகின்றனா். எனினும் தொற்று மேலும் பரவாத வகையில் மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
ஆனால், கேரளத்தில் நாள்தோறும் 20 ஆயிரம் போ் அளவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அம்மாநிலத்தில் உருமாறிய கரோனா தொற்றாளா் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
எனவே, புதுவை மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு இயக்கப்படும் ரயில் உள்ளிட்ட வாகனங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்கவேண்டியது அவசியம். காரைக்காலில் இருந்து எா்ணாகுளத்துக்கு தினமும் விரைவில் ரயில் இயக்கப்படுகிறது. கேரளத்துக்கு மீன் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்கின்றன. இதன்மூலம் புதுவை மாநிலத்தில் உருமாறிய கரோனா தொற்று பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. எனவே, அந்த மாநிலத்தில் தொற்று கட்டுப்பாட்டுக்கு வரும்வரை ரயில் உள்ளிட்ட போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கவேண்டும். இதுதொடா்பாக ரயில்வே நிா்வாகத்தை புதுவை அரசு வலியுறுத்தவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.