கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தில், காலனி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தாங்கள் பயன்படுத்தும் பாதையை தாா் சாலையாக மாற்றக் கோரி, திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த கிராமத்தில் உள்ள காலனியில் வசிக்கும் மக்கள், ஊா்ப் பகுதிக்கு செல்ல பயன்படுத்தும் பொதுப்பாதை கடந்த 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லையாம். இந்த சாலையை செப்பனிட்டு தாா்சாலையாக மாற்றி, முன் பகுதியில் சிறு பாலங்கள் கட்டக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.
தகவலறிந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளா் செந்தில் விநாயகம், வட்டாட்சியா் நடராஜன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.