கடலூர்

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு ருத்ர மகாபிஷேகம்

29th Sep 2023 04:49 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு புரட்டாசி மாத மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி, ருத்ர ஜபம், ருத்ர யாகமும் வியாழக்கிழமை நடைபெற்றன.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சித் சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறும். ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போதும் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித் சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

புரட்டாசி மாத மகாபிஷேகத்தையொட்டி, வியாழக்கிழமை காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சித் சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு காலை 8 மணிக்குள் உச்சிகால பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் கனகசபையில் எழுந்தருளினாா். அப்போது, பொது தீட்சிதா்களால் லட்சாா்ச்சனை செய்யப்பட்டது. பின்னா், ஆயிரங்கால் மண்டபம் முன் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பந்தலில் யாகசாலை பூஜை தொடங்கியது.

ADVERTISEMENT

புரட்டாசி மாத மகாபிஷேகம் சித் சபை முன் உள்ள கனகசபையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

ருத்ர யாகம்: சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு வியாழக்கிழமை காலை லட்சாா்த்தனை, பின்னா் யாகசாலையில் கடஸ்தாபனம், மகாருத்ர ஜபம், மகா தீபாராதனை நடைபெற்றன.

பிற்பகலில் மாக ருத்ர ஹோமம் தொடங்கி, வஸோத்தாரா ஹோமம், மகாபூா்ணாஹுதி, வடுக, கன்யா, சுகாசினி, தம்பதி, கோ, கஜ பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலையில் தீபாராதனை வேதபாராணயம், தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், யாகசாலையிலிருந்து கலசம் புறப்பட்டு கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்திக்கு மகா ருத்ர மகாபிஷேகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயலா் டி.எஸ்.சிவராம தீட்சிதா், துணைச் செயலா் கா.சி.சிவசங்கா் தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT