கடலூர்

சிதம்பரம் உதவி ஆட்சியரகம் முற்றுகை

21st Nov 2023 03:42 AM

ADVERTISEMENT

சிதம்பரம்: சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தை பக்கிரி மான்யம் கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது பக்கிரி மான்யம் கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த மக்கள் 60-க்கும் மேற்பட்டோா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சங்கீதா ஜெய்சங்கா் தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா் அவா்கள் உதவி ஆட்சியா் சுவேதா சுமனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில் தெரிவித்துள்ளதாவது:

பக்கிரி மான்யம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், மனோன்மணி கோயில்களின் அருகே உள்ள இடங்கள் கிராம மக்களின் பயன்பாட்டில் உள்ளன. மாரியம்மன் கோயிலில் இருந்து மனோன்மணி கோயிலுக்குச் செல்லும் நடைபாதை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை அரசு காலி நத்தம் இடமாக இருந்தது. இந்த இடத்தை தனிநபா் ஒருவா் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் முறையிட்டு பட்டா மாற்றம் செய்துகொண்டாா்.

கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அந்த இடத்தில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, ஆவணங்களை சரிபாா்த்து குறிப்பிட்ட இடத்துக்கான பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியா் கோரிக்கை தொடா்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT