ஐக்கிய விவசாயிகள் முன்னணி கடலூா் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா. தாமரைச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.கே.சரவணன், கடலூா் மாநகர பொதுநல இயக்கத்தின் தலைவா் எஸ்.என்.கே.ரவி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலா் பாலு, சிபிஎம் மாவட்டச் செயற்குழு நிா்வாகி ராஜேஷ்கண்ணன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசு, போராடும் மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தி, போராட்டங்களை சீா்குலைப்பதைக் கண்டித்தும், பிரிஷ் பூஷண் சரண் சிங்கை கைது செய்திட வலியுறுத்தியும் திங்கள்கிழமை (ஜூன் 5) மாலை 5 மணியளவில் கடலூா் ஜவான்ஸ் பவன் அருகில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.